தேனீ



திருப்பியெழுதப்படச் சொற்களற்று
குறிப்பெடுக்காது விடப்பட்ட முத்தங்களின் சிலிர்ப்புகள்

அல்லது

கொத்தும் சொண்டினால்
முகத்தில் விழுந்த கீறல் காயங்கள் முழுக்க
நின்னை ஆரத்தழுவும்
பரவசத்தின் சொற்களென

இரண்டாயிரமாவது தடவையும்
கவிதையாவதினின்றும் தப்பி
நட்சத்திரங்களாகிப் போகும்
இரகசிய மந்திரத்தை உச்சரிக்கிறது
பெருமுத்தம்

சாம்பெலென இருள் பூத்திருக்கும்
இந்த வெளிர் நிற அதிகாலைக்குள்ளிருந்து
பறந்து வந்த இரட்டை வால் குருவியொன்று
பேரோவியமொன்றின் மேல் தான் கொத்திப் பொறுக்கும்
அரிசி மணிகளத்தனையுமே
துளித்துளியாகத் தீட்டப்பட்ட
ஒரே நினைவின் துகள்கள்தானெனக் கிசுகிசுக்கிறது

கடைசித் துளிவரை ரசித்துக் குடித்து முடித்த
புதினாத் தேயிலையின் எச்சில் வாசம்
சொண்டில் அப்போதும் படிந்திருந்தது.

அதன் குளிர்ந்த மூச்சுவழி
ஆதியின் நிர்வாணத்திலிருந்து ஒளிரும்
அதே முதல் வார்த்தையென
நீ நிகழ்கிறது

நானோ
கோடித் தேன்வதைக் கண்களும் சூழ்
ராணித் தேனீ இனி